ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் – அணிந்துரை

நட்சத்திரங்களால் ஒரு நிலவு
————————

மேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள் செதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி மின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர்,
இளையவர் கவிஞர் ப்ரியன்.

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர் எனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய் இணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே அறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.

சின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட வளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.

காகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து விடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில் இவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே ஓட்டிவிடலாம்.

வாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு இழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில் நான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.இவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது,காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.

இவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார் பூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில்அசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது,அதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல்தெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே தெரிவாள்.

தன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன் காதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும் பொழுதுக்கும் கொடுத்துக்க்கொண்டே இருக்கிறார்.

அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை
ஆனாலும்
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்

காதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து விட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர் டைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல் சொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.

காதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள் கவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்.

தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்ன சில்லுகள்தாம்
மழை

சில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக இருக்கும்? யோசிக்கும்போதே நனைந்துபோகிறதல்லவா,தலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள்? கவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி விடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம்.அப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.

சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்

யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா? மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும் நாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில்
பூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி 🙂

மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை

இப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப் பண்பா 🙂 ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும் கட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்?

நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை

இதற்கு என்ன பொருள்?

https://www.theloadguru.com/