ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

Posted on May 22nd, 2008 by ப்ரியன்.
Categories: கவிதை, காதல்.

மணல் ஓவியங்கள் -
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!

#

தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!

#

நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!

#

இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!

#

நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் -
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

#

 

- ப்ரியன்.

14 comments.

பாப்பா பாட்டு!

Posted on May 14th, 2008 by ப்ரியன்.
Categories: பிற.

கொஞ்ச நாள் முன்னால் வரை நானும் ஒரு சிறுவனாக இருந்தேன் என்பதை நினைத்தால் மிகவும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.கிழிந்த டவுசரில் கட்டமாக கிழித்த காகித்ததை தபால் என்று போட்டதும் , வேப்பங்கொட்டையை எச்சல் துப்பிய விரல் முட்டியில் வைத்து தோல் கிழிய அடித்ததும் , பகல் உணவு வேளையில் கமல் அணி ரசினி அணி என பிரிந்து அடித்துக் கொண்டதும் , சின்ன வயது சிநேகம் தந்த தோழியின் கதகதப்பும் , பறித்து தின்ற பருத்திப் பிஞ்சுகளின் சுவை நாக்கில் நிறையும் நேரத்தில், சத்தமாய் ராகத்தோடு இழுத்து இழுத்து பாடிய சில பாடல்களில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன்.

தோசை அம்மா தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவிற்கு நான்கு
அண்ண்னுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஓன்று
சீனி நெய்யும் சேர்த்து
கூடி கூடி உண்போம்!

*

நிலா நிலா ஓடி வா
நிலாமல் ஓடி வா

மலை மீது ஏறி வா
மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட அட்ட நிலவே
வண்ண முகில்ப் பூவே

பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல சுற்றி வா!

*

அணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா

கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா

பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்

கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்!

*

குள்ள குள்ள வாத்து
குவா குவா வாத்து

மெல்ல உடலைச் சாய்த்து
மேலும் கீழும் பார்த்து

செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து!

*

தோசை அம்மா தோசை என்றதும் கை மேல் கை வைத்து தோசை ஊற்றுவது போன்ற பாவனையும் , நிலாவையும் அணிலையும் கை தூக்கி அழைப்பதையும் , வாத்து பாடல் படித்ததும் கைவலி டீச்சர்(கைவேலை டீச்சர்) குச்சியை கையில் வைத்துக் கொண்டு வாத்து போல குத்த வைத்து நடந்து காட்டியது நினைவுக்கு வருவதையும் இன்றும் தடுக்க முடிவதில்லை.

4 comments.

பட்டாம்பூச்சி தொலைத்தவன்.

Posted on May 2nd, 2008 by ப்ரியன்.
Categories: கவிதை.

 

எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!

*

5 comments.