பிதற்றல் கடிதம்

காதல் காய்ச்சல் கண்டவன்
காய்ச்சல் முற்றலில்
வரையும்
பிதற்றல் கடிதம்தான்
கவிதை நடை
எதிர்பார்த்து ஏமாந்துவிடாதே!

அன்பே எனத்தெரியாது!
ஆருயிரே என பிணற்ற தெரியாது!
என் சொத்தே
என் பல் சொத்தையே
என உனை நகைக்க
வைக்க தெரியாது!

ஆனாலும்,
என் உயிர்
மொத்தமே நீதானடி…

உனை கண்ட அந்த
நொடிக்கு பின்தான்
அறிந்தேன்
என்னுள்ளும்
இதயம் என்று
ஒன்றிருப்பது!

கண்டுகொண்ட கணம் மட்டும் தான்
அது எனக்கு சொந்தமாயிருந்தது!
அப்போதே அது – சொல்லாமல்
உன் பின்னால்
சென்றாகிவிட்டது!

உன்னிடம் எது பிடிக்கும் என
தனியாய் கேட்க்காதே!

உன் கொடியிடை
தொடும் முடி பிடிக்கும்!
யாழ் கொஞ்சும்
குரல் பிடிக்கும்!
காற்றுக்கு வலிக்குமென
மெல்ல மூச்சு விடும்
நாசி பிடிக்கும்!
உள் மிடறும் தண்ணீரை
வெளி காட்டும் கழுத்து பிடிக்கும்!
சென்சாரில் சிக்கும்
சில பாகங்கள் பிடிக்கும்!
பேணிப் பேணி நீ வளர்க்கும்
உன் செல்ல சின்ன
தொப்பையும் பிடிக்கும்!
மெல்ல மெல்ல அடி வைத்து
உன் அடி பூமியில்
வரையும் ஓவியங்கள்
இல்லை காவியங்கள் பிடிக்கும்!
சின்ன சின்ன குழந்தைகளுடன்
கொஞ்சி விளையாடும்
உன் சின்னபிள்ளைதனம்
பிடிக்கும்!

மொத்தத்தில் சொல்ல போனால்
என்னை கொள்ளைக் கொண்டதனால்
காரணப்பெயர் கொண்ட – உன்
கொள்ளையழகு பிடிக்கும்!

இப்படியே சொல்லி
கிடந்தால் சீக்கிரத்தில் – எனக்கு
பைத்தியமும் பிடிக்கும்!

அதனாலே வரைகின்றேன்
இம்மடல்!
உனக்கும்
பைத்தியம் பிடிக்குமென்றால்
வா!
நம் கல்லூரி திடல்!

ஒற்றை மரத்தடியில்
காத்திருப்பேன்!
உயிரெல்லாம் சேர்த்து
பூத்திருப்பேன்!

வந்தால்,
உன் மடியில் விழும்
முதல் பூவாவேன்!
வராவிட்டால்?
என்னடி அம்மரத்தில்
ஒரு வேராவேன்!

– ப்ரியன்.

Reader Comments

  1. யாழ்_அகத்தியன்

    பிடித்த வரிகள்:
    சின்ன சின்ன குழந்தைகளுடன்
    கொஞ்சி விளையாடும்
    உன் சின்னபிள்ளைதனம்
    பிடிக்கும்!

  2. அருட்பெருங்கோ

    ப்ரியன்,

    வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கவி சமைக்கிறீர்…ம்ம்ம்..ருசியோ ருசி…எப்படிங்க இப்படிலாம்???

    எல்லாத்தையும் படிச்சுட்டு மறுபடி வர்றேன்…

    அன்புடன்,
    அருள்.

  3. யாத்திரீகன்

    என்ன பேர்னு கேட்குற அளவுக்கு நிறைய.. பேர்களா ப்ரியன் 😉
    சரி சரி…. அதெப்படி அவுங்க சொன்னதை உங்க கிட்ட சொல்றது…

  4. ப்ரியன்

    என் ரகசியங்கள் பல் வெளியேறிடுச்சு போல செந்தில்…என்ன பேர் சொன்னாங்கனு தனி மடல் ல சொல்லுறீங்களா?

  5. யாத்திரீகன்

    ஹீம்… உங்க கல்லூரித் தோழிகள் சொல்லி இருக்காங்க.. அது ப்ரியா இல்லைனு.. ஆனால்.. தொப்பைனதும், அந்த பெயர் தோணுனதை தவிர்க்க முடியல… 😉

  6. ப்ரியன்

    *கயல்விழி*

    *இவை அனுபவத்தின் வெளிப்பாடா? இந்த கவிதைகள் கற்பனையா?*

    கவிதைகளைப் பொருத்தமட்டும் என்னது எல்லாம் கற்பனையே கயல்விழி…

    பாராட்டுதலுக்கு நன்றி

    *செந்தில்*

    *ஜோதிகாப்ப்ரியா-வா ? 😉 *

    ஹா ஹா ஹா…அவள் பெயர் ப்ரியாவே அல்ல :)…

    *முகில்*
    *..ம், பரவாயில்லை!*

    பின்னூட்டத்துக்கு நன்றி முகில்&செந்தில்

  7. துடிப்புகள்

    ..ம், பரவாயில்லை!

    பிடித்த வரிகள்:

    //காற்றுக்கு வலிக்குமென
    மெல்ல மூச்சு விடும்
    நாசி பிடிக்கும்//

    //பேணிப் பேணி நீ வளர்க்கும்
    உன் செல்ல சின்ன
    தொப்பையும் பிடிக்கும்!//

  8. யாத்திரீகன்

    >>பேணிப் பேணி நீ வளர்க்கும்
    >>உன் செல்ல சின்ன
    >> தொப்பையும் பிடிக்கும்!

    ஹா ஹா ஹா…. இந்த வரிதான் ப்ரியன் ரொம்ப அருமை… , ப்ரியாவோட முழுப்பெயர், ஜோதிகாப்ப்ரியா-வா ? 😉 சும்மா ஜாலிக்கு அந்த கமெண்ட், கண்டுக்காதீங்க ப்ரியன்…..

  9. கயல்விழி

    அழகான வரிகளில்
    அற்புதமாய் கவிதை எழுதுகிறீர்கள். இவை அனுபவத்தின் வெளிப்பாடா? இந்த கவிதைகள் கற்பனையா? அனுபவிச்சு எழுதிற மாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.

Write a Comment

Your email address will not be published.

https://www.theloadguru.com/