சிதறிய கனவுகள்!

மும்பையில் மூன்று வருடங்களுக்கு முன் “இந்தியா கேட்”டில் குண்டுவெடித்தப் பொழுது நான் மும்பையில் இருந்தேன்.அக்கணம்,அச்செய்தியை தொலைக்காட்சியில் கண்ட கணம் எழுதியது…இன்றும் மும்பையில் குண்டுவெடித்து இக்கவிதையோடு ஒத்துவருவது மனதினை என்னவோ செய்கிறது.இறைவா!இறந்த அப்பாவிகளுக்கு ஆன்மா சாந்தி தா!இனி இது போலொரு கொடுமை நிகழாமல் காத்திடு!

மும்பையில் குண்டுவெடிப்பு
ஐம்பது பேர் பலி
அவசரம் காட்டும் சேனல்கள்!

இல்லையில்லை பலி எண்ணிக்கை
வெறும் நாற்பத்தொன்பதே
மறுக்கும் அரசாங்கம்!

ஊரிலிருந்து உறவுகளின்
உயிர்களை விசாரிக்கும்
தொலைப்பேசி அழைப்புகள்!

அண்டை நாட்டை அவசர அவசரமாய்
நினைவிற்கு கொணரும்
அமைச்சர்கள்!

அடுத்த ஆபரேசனுக்கு
ஆனந்தமாய் ஆயுத்தமாகும்
தீவிரவாதிகள்!

தேர்தலில் ஆதாயம்
பெறமுடியுமா ஆராயும்
எதிர்க்கட்சிகள்!

என்று,
இங்கு யாருக்குத்தான்
கவலை!
என்னைப் போன்ற
இறந்துப் போனவர்களின்
சின்னச் சின்ன
சிதறிய கனவுகளைப் பற்றி!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/