பெரு விருட்சமாய்

என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!

*

உனை திட்டிவிடும்
கணங்களில் – உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!

*

எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!

*

இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!

*

எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் – வசத்தில்!

*

கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!

– ப்ரியன்.

https://www.theloadguru.com/